சரித்திர நவீனத்தின் பிதாமகரான கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் சரித்திர நவீனத்துக்கு, இந்த மலர்ச்சோலை மங்கை புதினம் முன்னோட்டம். பொன்னியின் செல்வனில் வரும் வந்திய தேவன், ரவிதாசன், குந்தவை, சுந்தரச் சோழர் போன்ற பல கதாபாத்திரங்களின் இளமைக் காலம் இந்த சரித்திர நவீனத்தில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வனின் காலகட்டத்துக்கு முன் நடந்த பல நிகழ்வுகளை கல்கி தனது புதினத்தில் பல இடங்களில் கோடிட்டு காட்டியுள்ளார். அந்தச் சம்பவங்கள் ஏன் நடந்தன என்பதை பற்றி இந்த பெருங்கதையில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக * வந்தியத்தேவன் ஏன் ஆதித்த கரிகாலனை காஞ்சியியல் போய் பார்க்க வேண்டும்? என்று பொன்னியின் செல்வனைப் படிப்பவர்களுக்கு தோன்றும். அதற்கான விளக்கம் இந்த கதையில் இருக்கிறது. * ரவிதாசன் யார்? அவன் செயல்களுக்கு என்ன மூல காரணம் என்று பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் எண்ணி இருப்பார்கள். ரவிதாசன் யார் என்பது பற்றி வித்தியாசமான கோணத்தில் இந்த புதினத்தில் சொல்லப்பட்டுள்ளது. * ரோஹண நாட்டில் மறைத்து வைக்கப்பட்ட பாண்டிய மணிமகுடம், இந்திர ஹாரம் உண்மையில் அங்குதான் வைக்கப்பட்டு இருந்ததா? ஏன் பலமுறை சோழர் படைகள் அதை முற்றுகை இட்டும் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை? என்ற எண்ணம் பலருக்கு வந்து இருக்கும். அதற்கு பதிலும் இந்த புதினத்தில் உள்ளது. இது போன்ற பொன்னியின் செல்வனில் வரும் பல விவரங்களுக்கு விடைகளை எனக்கு தெரிந்த அளவில் இந்த சரித்திர நவீனத்தில் கொடுத்துள்ளேன். அந்தக் காலத்தில் இருந்த பழக்க வழக்கங்கள் பற்றி பல இடங்களில் இந்தப் புதினத்தில் மிக விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. மதுரை வேளூர் யுத்தத்தின் முடிவில் ஆரம்பிக்கும் இந்த நவீனம், மாறவர்மர் மற்றும் வீரபாண்டியன் வாழ்வில் நடந்த பல வீரச் செயல்களையும் சரித்திர சம்பவங்களையும் கடந்து வந்திய தேவன், வீராணம் ஏரிக்கு வந்து சேரும் பொழுது முடிவடைகிறது.